தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர்

Started by VelMurugan, Jan 24, 2009, 02:59 PM

Previous topic - Next topic

VelMurugan

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் கல்யாணி ஆனி


சென்னை : தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, சென்னை கொரட்டூர் பக்தவத்சலம் நினைவு பெண்கள் கல்லூரி முதல்வர் கல்யாணி ஆனி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்த பழனிச்சாமி, டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.


இப்பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இன்னாசிமுத்து தலைமையில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி, உறுப்பினர் செயலர் பாஸ்கரன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு புதிய துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேர் கொண்ட பட்டியலை கவர்னருக்குப் பரிந்துரை செய்தது.ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, சென்னை கொரட்டூர் பக்தவத்சலம் நினைவு பெண்கள் கல்லூரியின் முதல்வர் கல்யாணி ஆனியை தமிழக கவர்னர் நியமித்துள்ளார்.


பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கல்யாணி ஆனி அப்பதவியை வகிப்பார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.பச்சையப்பன் கல்லூரியில் ஆங்கிலத்தில் எம்.பில்., பட்டம் பெற்றுள்ள கல்யாணி ஆனி, அண்ணா ஆதர்ஸ் கல்லூரியில் பேராசிரியராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். பின், பக்தவத்சலம் நினைவு பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராக சேர்ந்த கல்யாணி, துணை முதல்வர், முதல்வர் பதவியை வகித்து வருகிறார். சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.


கல்யாணி ஆனி கூறுகையில், ""தமிழக அரசின் உயர்கல்வி கொள்கைக்கு ஏற்ப, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர் எண்ணிக்கையை உயர்த்தவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வியின் தரத்தை உயர்த்த, பாடத்திட்டங்களில், வல்லுனர்களைக் கொண்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும். கல்வியைத் தொடராதவர்களும், கிராமப்புற மாணவர்களும் தங்களது உயர்கல்வியைத் தொடர தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடரும்,'' என்றார்.தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கல்யாணி ஆனி, தமிழக நிதியமைச்சர் அன்பழகனின் உறவினர்.

Source : தினமலர்